புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஜனநாயகத்திற்கே ஆபத்து! – மனித உரிமை ஆர்வலர் அம்பிகா சற்குணநாதன் எச்சரிக்கை!

image 1200x800 34 1

இலங்கை அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (PSTA), தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) விடப் பல மடங்கு கொடூரமானது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை (17) கொழும்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், இச்சட்டம் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

தற்போதுள்ள சட்டத்தின் கீழ் ஒருவரை ஓராண்டுக்குப் பின்னர் பிணையில் விடுவிக்க வாய்ப்புள்ள நிலையில், புதிய சட்ட வரைபு பிணை வழங்கும் அதிகாரத்தை வெகுவாகக் குறைக்கிறது. “ஒருவரை ஓராண்டு காலம் தடுப்பாணையில் வைக்கலாம்; அதன் பின்னர் தடுப்புக்காவலில் வைக்கலாம். இதன் விளைவாக, ஒருவர் கைது செய்யப்பட்டால் குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே பிணையில் வெளிவர முடியும்” என்று அவர் விளக்கினார். பயங்கரவாதம் குறித்த வரைவிலக்கணம் மிகவும் விரிவாக உள்ளதால், சாதாரண குற்றங்களுக்காகவும் எவரையும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும் என்பது இதன் முக்கிய ஆபத்தாகும்.

ஜனநாயக நாடுகளில் இராணுவம் காவல்துறையின் பணிகளைச் செய்யக்கூடாது என்ற போதிலும், இந்தப் புதிய சட்டம் இராணுவத்திற்குத் தேடுதல் மற்றும் கைது செய்யும் அதிகாரங்களை வழங்கியுள்ளது. இது நாட்டை மேலும் இராணுவ மயமாக்கலுக்கு இட்டுச் செல்லும் என அவர் கவலை தெரிவித்தார். அத்துடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் ஜனாதிபதிக்கும் அதீத அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதால், சிவில் அமைப்புகளைத் தடை செய்வது மற்றும் மக்களின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவது போன்ற நடவடிக்கைகள் எளிதாகிவிடும் என அவர் எச்சரித்தார்.

நீதித்துறைக்குரிய பல அதிகாரங்கள் காவல்துறைக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் மாற்றப்பட்டுள்ளமை இச்சட்டத்தின் மற்றொரு பாரதூரமான விடயமாகும். “இது அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதை விட, மக்களின் ஜனநாயக உரிமைகளைச் சிதைப்பதையே இலக்காகக் கொண்டுள்ளது” என்று அம்பிகா சற்குணநாதன் மேலும் குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கு ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் கலந்துகொண்ட இந்நிகழ்வில், இச்சட்டத்திற்கு எதிராகச் சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் பலத்த எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது.

 

 

Exit mobile version