காலி நகரில் தனியார் வகுப்பு ஒன்றில் கல்வி பயிலும் 11-ஆம் தர மாணவிக்கு மனிதாபிமானமற்ற முறையில் 160 பிரம்படிகள் வழங்கி காயப்படுத்திய ஆசிரியரை பிணையில் விடுவிக்க காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலி நகரில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில், 11-ஆம் தர மாணவி ஒருவருக்கு ஆசிரியர் கணித வினாத்தாள் ஒன்றை வழங்கியுள்ளார். அதில் அந்த மாணவி எதிர்பார்த்த புள்ளிகளை விட 32 புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளார். இதற்காக ஆத்திரமடைந்த ஆசிரியர், ஒரு புள்ளிக்கு 5 அடிகள் என்ற வீதத்தில் மாணவியின் இரு கைகளிலும் மொத்தம் 160 முறை பிரம்பால் அடித்துத் தண்டித்துள்ளார்.
ஆசிரியரின் கொடூரமான தாக்குதலால் பலத்த காயமடைந்த மாணவி, தற்போது காலி கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒரு பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மாணவியின் தந்தை அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், காலி தலைமையக காவல்நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவியின் உறவினர்கள் தன்னைத் தாக்கியதாகக் கூறி, குறித்த ஆசிரியரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (19) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த காலி மேலதிக நீதவான் மஹேஷிகா விஜேதுங்க, தலா 3 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல ஆசிரியருக்கு அனுமதி வழங்கினார்.