காணி உரிமையில் புதிய புரட்சி: ‘உரித்து’ பூரண அளிப்புப் பத்திரத் திட்டம் ஜனாதிபதியால் நாளை ஆரம்பம்!

23

அனுமதிப் பத்திரங்கள் மற்றும் கொடுப்பனவுப் பத்திரங்களின் கீழ் காணிகளைப் பயன்படுத்தி வரும் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு, அந்தக் காணிகளின் முழு உரிமையையும் வழங்கும் ‘உரித்து’ (Urimai) தேசியத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நாளை (27) அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில், அநுராதபுரம் கொரகஹவெவ வடமத்திய மாகாண சபை மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இடம்பெறவுள்ளது.

சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு:
1935ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்களை வைத்துள்ள மக்கள், தமது காணி மீது முழுமையான உரிமை இல்லாததால் அவற்றை அடமானம் வைக்கவோ அல்லது பொருளாதாரத் தேவைகளுக்காக முழுமையாகப் பயன்படுத்தவோ முடியாமல் பல தசாப்தங்களாகப் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், தற்போதுள்ள நிபந்தனைகளை நீக்கி, 1947ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ‘பூரண அளிப்புப் பத்திரம்’ (Grant) வழங்கப்படவுள்ளது.

நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தல்:
தங்கள் விருப்பத்தின் பேரில் பழைய அனுமதிப் பத்திரங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் பயனாளிகளுக்கு, புதிய ‘ஹிமிகம’ (Himigama) எனும் உரித்து அளிப்புப் பத்திரம் வழங்கப்படும். முதற்கட்டமாக நாளை அநுராதபுரம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 500 பயனாளிகளுக்கு இந்த ஆவணங்கள் ஜனாதிபதியால் கையளிக்கப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் ஊடாகக் காணி உரிமையற்ற இலட்சக்கணக்கான குடும்பங்கள் நிரந்தர காணி உரிமையாளர்களாக மாறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

Exit mobile version