உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

world 42

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அரசாங்கத்தின் கொள்முதல் தேவைகளைப் பூர்த்தி செய்வதில், உள்நாட்டு வணிகங்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (ஏப்ரல் 08, 2026) காலை இலங்கை ஐக்கிய வர்த்தகக் கூட்டமைப்புடன் (CUBA) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இக்கருத்துக்களைத் தெரிவித்தார். மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உள்ளூர் தொழில்துறையினர் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றுக்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, செஸ் (Cess) வரி தொடர்பான சிக்கல்கள், தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் சட்டவிரோத இறக்குமதிகள் சந்தையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து வர்த்தகர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்குத் கொண்டு சென்றனர்.

தரம் குறைந்த பொருட்கள் உள்நாட்டுச் சந்தையில் அதிகளவில் விநியோகிக்கப்படுவதைக் கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார். அத்துடன், துறைமுகங்களில் கொள்கலன்களை விடுவிக்கும் செயல்முறையில் உள்ள தாமதங்கள் மற்றும் செயல்திறன் குறைபாடுகளை நீக்கி, அதனை மேலும் நெறிப்படுத்துவது குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பான மேலதிக பேச்சுவார்த்தைகளை உரிய துறைகளுடன் முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர்களான டாக்டர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, சதுரங்க அபேசிங்க, அமைச்சின் செயலாளர் டாக்டர் ஹர்ஷனா சூரியப்பெரும உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். இலங்கை ஐக்கிய வர்த்தகக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் தானியா எஸ். அபேசேகரா மற்றும் அதன் உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

Exit mobile version