எதிர்க்கட்சிகளிடம் ஹிட்லர் போல கத்தும் ஜனாதிபதி, IMFயிடம் பூனை போல இருக்கிறார்; சர்வாதிகாரத்தால் தான் ஹிட்லர் அழிந்தார் என்பதை நினைவில் கொள்க! – நாமல் ராஜபக்ஷ ஆவேசம்!

24 66d99882b2e24

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் ஹிட்லரைப் போன்று கத்துகின்றார் என்றும், ஆனால் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) மட்டும் பூனை போல் இருக்கிறார் என்றும் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) இடம்பெற்ற 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

வரவு செலவு திட்ட உரையின்போது ஜனாதிபதி பேசியதைச் சுட்டிக்காட்டி நாமல் ராஜபக்ஷ மேலும் உரையாற்றியதாவது,
“ஜனாதிபதி வரவு செலவு திட்ட உரையின்போது என்னைக் குறித்து இங்கு ஹிட்லர் என்றும், சர்வாதிகாரி என்றும் கூறினார்கள். அமெரிக்காவும், ரஷ்யாவும் இணைந்து ஹிட்லரைத் தோற்கடித்ததுபோல, எதிரணிகள் ஒன்றிணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைத் தோற்கடிப்பார்களாம். யார் இங்கு ரஷ்யா? அமெரிக்கா? என்று கேட்டார். யார் இங்கு ரஷ்யாவாக இருந்தால் என்ன? அமெரிக்காவாக இருந்தால் என்ன? அது முக்கியமில்லை. ஹிட்லர் அவருடைய சர்வாதிகாரத்தாலே அழிந்தார் என்பதுதான் முக்கியம். இந்த உண்மையை ஜனாதிபதி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.”

“ஜனாதிபதி எங்களிடம் ஹிட்லர் போன்று கத்துவதை போன்று ஐ.எம்.எப்-பிடம் கத்துங்கள் பார்க்கலாம். அங்கு மட்டும் பூனை போல் இருக்கிறீர்கள். சர்வதேச நாணய நிதியத்தை விரட்டுவதாக கூறிக்கொண்டே ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தார். ஆனால் எங்களுக்கு போடும் சத்தத்தை சர்வதேச நாணய நிதியத்திற்குப் போடுவதில்லையே. மக்களுக்கு அநீதியாக வரி அறவிட வேண்டாம். பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் கூறுங்களேன். அதைக் கூறமாட்டார்,” என்று நாமல் ராஜபக்ஷ ஆவேசமாகக் கூறினார்.

Exit mobile version