2026 ஆம் ஆண்டுக்கான யால (சிறுபோக) பருவ விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான உரங்களை எவ்விதத் தடையுமின்றி விவசாயிகளுக்கு வழங்குவதை உறுதிப்படுத்துவது குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (ஏப்ரல் 02, 2026) விசேட கலந்துரையாடலொன்றை முன்னெடுத்தார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கமத்தொழில் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் உர இறக்குமதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றமான சூழலால் சர்வதேச விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.
தற்போதைய யால பருவத்தில் சுமார் 550,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்பயிர்ச் செய்கை முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அதற்கு சுமார் 125,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் 68,000 மெட்ரிக் தொன் யூரியா கையிருப்பில் உள்ளதோடு, மேலதிகமாக 77,000 மெட்ரிக் தொன் உரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான கொள்வனவு கட்டளைகள் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் மாத தொடக்கத்தில் ஓமானில் இருந்து வரவிருந்த 25,000 மெட்ரிக் தொன் யூரியா உரக் கப்பல் வருகையில் நிலவும் தாமதங்கள் குறித்தும், அதனை ஈடுசெய்ய எடுக்கப்பட வேண்டிய மாற்று நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் ஜனாதிபதியிடம் விளக்கமளித்தனர்.
உர விநியோகத்தில் நிலவும் சிக்கல்களைத் தவிர்க்க, தற்போதைய கையிருப்புகளை முறையாக முகாமைத்துவம் செய்யுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குறிப்பாக, நெற்பயிர்ச் செய்கைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் யூரியா உர விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கும், விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்களின் பரிந்துரையின் பேரில் மாத்திரம் உரங்களை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. உர இறக்குமதி நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவைப் பணத்தை உடனடியாகக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும், இதன் மூலம் தடையற்ற விநியோகத்தை உறுதிப்படுத்துமாறும் ஜனாதிபதி நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
வறட்சியான காலநிலை மற்றும் சர்வதேச அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் குறைத்து அவர்களுக்குத் தேவையான உரங்களை நியாயமான விலையில் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். எதிர்காலத்தில் இத்தகைய நெருக்கடி நிலைகளை எதிர்கொள்ள நீண்டகாலத் திட்டங்களை வகுப்பதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியும் என்பதால், எக்காரணம் கொண்டும் உர விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என அவர் அதிகாரிகளுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்தார்.

