வடக்கிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி அநுர: காற்றாலை மின் திட்டம் மற்றும் வீட்டுவசதித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கிறார்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (15) மற்றும் நாளை (16) ஆகிய இரு தினங்கள் வடமாகாணத்தில் பல்வேறு உத்தியோகபூர்வ மற்றும் கலாசார நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக விசேட விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இன்று முற்பகல் 10 மணியளவில் மன்னார், கொன்னையன் குடியிருப்பு பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டத்தை தேசிய மின்சாரக் கட்டமைப்பில் ஜனாதிபதி இணைத்து வைத்தார்.

நண்பகல் 12 மணிக்கு மன்னார் சௌத்பார் பகுதியில் மற்றுமொரு புதிய காற்றாலை மின்சாரத் திட்டத்துக்கான அடிக்கல்லை அவர் நாட்டவுள்ளார்.

பிற்பகல் 2 மணி: வேலணை ஐயனார் கோயில் முன்றிலில் நடைபெறும் தைப்பொங்கல் விழா. மாலை: மானிப்பாய் மருதடி விநாயகர் கோயில் வளாகத்தில் வடமாகாண சுற்றுலா அபிவிருத்தி சபை நடத்தும் பொங்கல் விழா.

நாளை காலை தென்மராட்சி, மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை மைதானத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 2,500 குடும்பங்களுக்காக வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதன்போது பயனாளர்களுக்கு நிவாரண நிதிக்கான காசோலைகளும் வழங்கப்படவுள்ளன.

நாளை பிற்பகல் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறவுள்ள “முழு நாடும் ஒன்றாக” எனும் போதைப்பொருளுக்கு எதிரான தேசிய கருத்திட்ட நிகழ்வில் ஜனாதிபதி விசேட உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் வடக்கு மாகாணத்தின் எரிசக்தி, வீடமைப்பு மற்றும் கலாசார விழுமியங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த விஜயம் அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

 

 

Exit mobile version