இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

image 1200x800 19 2

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து அவர் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். பிரதமரின் இந்த வருகைக்கு முன்னதாகவே, இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் பல முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இஸ்ரேலில் நடைபெற்ற இதற்கான சிறப்பு நிகழ்வில், 30 இந்திய நிறுவனங்களும் 26 இஸ்ரேலிய இராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்களும் கலந்துகொண்டன. இரு நாட்டு இராணுவ அமைச்சகங்களின் முன்னிலையில், தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் கூட்டு உற்பத்தி ஆகிய துறைகளில் இந்த 56 நிறுவனங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர அளவிலான இராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்களை ஒன்றிணைப்பதும், இந்தியாவின் இராணுவக் கொள்முதல் முறைகளை இஸ்ரேலிய நிறுவனங்கள் எளிதாகப் புரிந்துகொள்வதும் இந்த ஒப்பந்தங்களின் முதன்மை நோக்கமாகும்.

நெருக்கடியான காலங்களில் ஒருவருக்கொருவர் துணையாக நின்ற வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட இவ்விரு நாடுகளும், இனிவரும் காலங்களில் இராணுவத் தொழில்துறையில் மேலும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை இஸ்ரேலிய இராணுவ அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. “மேக் இன் இந்தியா” திட்டத்தின் கீழ் பாதுகாப்புத் தளவாடங்களை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான இஸ்ரேலியத் தொழில்நுட்ப உதவிகள் இந்த விஜயத்தின் மூலம் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Exit mobile version