தமக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்துப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் நேற்று (23) காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.
“எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை. பிரதமர் பதவியில் மாற்றம் வேண்டும் என நாட்டு மக்கள் தீர்மானித்தால், நான் இப்போதே வீட்டிற்குச் செல்லத் தயாராக இருக்கிறேன். நான் கட்டுப்படுவது நாட்டு மக்களுக்கும் எனது மனசாட்சிக்கும் மட்டுமே” எனப் பிரதமர் சபையில் தெரிவித்தார்.
ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்புவதாகக் கூறி தோல்வியடைந்த எதிர்க்கட்சியினர், இப்போது பிரதமரை வீட்டுக்கு அனுப்பும் ‘பகல் கனவு’ காண்கிறார்கள். அது ஒருபோதும் பலிக்காது என அவர் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர்,இச்சட்டம் பல்கலைக்கழக கட்டமைப்பை அரசியல்மயமாக்கும் என்ற எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டை அவர் மறுத்தார். 1978-ஆம் ஆண்டு சட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கவே இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.
தரம் 6 முதல் 13 வரை மாணவர்களுக்கு நடைமுறைக்குச் சாத்தியமான, சர்வதேச சவால்களை எதிர்கொள்ளக்கூடிய கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு.
தரம் 6 பாடப்புத்தகத்தில் ஏற்பட்ட தவறை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், அதனைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதனை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த சில வாரங்களாகத் தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகம் மற்றும் கல்வி மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். இந்நிலையில், பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரப் போவதாக எதிர்க்கட்சி அறிவித்திருந்தது. அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே நேற்றைய விவாதம் அமைந்திருந்தது.

