சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் உணவுகளின் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய அளவில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின் போது, சுமார் 400 வர்த்தகர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினால் (PHIs) கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை இந்தச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் சுமார் 2,000 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதுடன், நாடு முழுவதும் உள்ள 12,000 கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
தரமற்ற உணவுகளை விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை வைத்திருந்தமை, சுகாதாரமற்ற முறையில் உணவுகளைக் கையாண்டமை மற்றும் முறையற்ற களஞ்சியப்படுத்தல் போன்ற காரணங்களுக்காகவே இந்த 400 வர்த்தகர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சங்கம் தெரிவித்துள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிவடைந்த பின்னரும் மக்கள் பெருமளவில் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதால், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தச் சோதனைகள் பண்டிகைக் காலம் முழுவதும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அவற்றின் தரம் மற்றும் காலாவதித் திகதி குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.