இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை முழுமையாக முறைப்படுத்தும் நோக்கில், இனிவரும் காலங்களில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் ‘தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர’ (QR) முறை மூலம் மட்டுமே எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இன்று (15) பிற்பகல் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண, பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், எரிபொருள் கையிருப்பில் எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை என்றும் உறுதிப்படுத்தினார்.
இன்று காலை QR முறை அமுலுக்கு வந்தபோது ஏற்பட்ட தற்காலிக இணையத் தொழில்நுட்பக் கோளாறுகள் தற்போது முழுமையாகச் சரிசெய்யப்பட்டுள்ளதாகத் தலைவர் குறிப்பிட்டார். “அடுத்த மாதம் இறுதி வரை எரிபொருள் விநியோகத்தில் எவ்விதச் சிக்கலும் ஏற்படாது. எரிபொருள் நிலையங்களுக்குத் தேவையான எரிபொருள் அளவு முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு, கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் வரிசைகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை,” என்று அவர் விளக்கமளித்தார்.
எரிபொருள் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யப் பொலிஸாரின் தலையீடு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் மொத்த எரிபொருள் அளவுக்கும், QR முறை மூலம் விநியோகிக்கப்பட்ட அளவுக்கும் இடையில் வித்தியாசம் காணப்பட்டால், சம்பந்தப்பட்ட நிலையங்களின் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார். QR முறைக்குப் புறம்பாக எரிபொருளை விநியோகிக்கும் நிலையங்கள் மற்றும் தேவையற்ற முறையில் வரிசைகளில் நிற்கும் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பொதுப் போக்குவரத்து மற்றும் அத்தியாவசியத் துறைகளுக்கான விநியோக ஏற்பாடுகளும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. பயணிகள் போக்குவரத்து பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்துச் சபை (CTB) ஊடாக எரிபொருள் வழங்கப்படும் என்றும், அவற்றின் தினசரித் தேவைக்கேற்ப QR ஒதுக்கீடு மாற்றியமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மீன்பிடி மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடுகளும் முறையாகத் தொடரப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தித் தமது எரிபொருள் ஒதுக்கீடுகளைக் கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

