யாழ்ப்பாணத்தில் (Jaffna) வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் உட்பட மொத்தமாக ஆறு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணக் காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இந்த ஆறு பேரையும் கைது செய்து, காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணையின் போது, குறித்த ஆறு பேரில் ஒருவர் யாழ்ப்பாண நகர் பகுதியில் இடம்பெற்ற வழிப்பறிக் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்பதனைக் காவல்துறையினர் கண்டறிந்தனர்.
அவரிடம் முன்னெடுத்த மேலதிக விசாரணைகளின் போது, கொள்ளையடிக்கப்பட்ட சங்கிலி மற்றும் கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள ஆறு பேரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்துத் தொடர் விசாரணைகளை காவல்துறையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.