இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என்றும், கடந்த காலங்களைப் போலன்றி இந்த முறை அது நடைமுறையில் சாத்தியப்படுத்தப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் உரையில் ,முந்தைய அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்குப் பல வாக்குறுதிகளை அளித்தும் அவற்றை நிறைவேற்றத் தவறிவிட்டன. அந்தத் தவறுகளைத் தற்போதைய அரசாங்கம் மீண்டும் செய்யாது என அவர் உறுதியளித்தார்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், சமத்துவம், பாதுகாப்பு மற்றும் அதிகாரப் பகிர்வு போன்ற அடிப்படை விடயங்கள் குறித்து விரிவான மற்றும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படும்.
அனைத்து இன மக்களையும் உள்ளடக்கிய, ஒற்றுமையான மற்றும் பிளவுகளற்ற ஒரு நாட்டை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்காகும்.
இனப்பிரச்சினை என்பது நாட்டின் உள்நாட்டு விவகாரம் என்றாலும், இது தொடர்பாகச் சர்வதேச சமூகத்திடம் இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகவும் பொறுப்புடனும் செயற்படும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை மதித்து, அவர்கள் மீது சிதைந்து போயுள்ள நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதே இந்த அரசாங்கத்தின் பலம் என அமைச்சர் தெரிவித்தார். “நாங்கள் வழங்குவது வெறும் வாக்குறுதி அல்ல; அதைச் செயல்படுத்திக் காட்டும் அரசாங்கமாக இருப்போம்” என அவர் தனது உரையில் ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்.