ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்கள் ஒரு மாதத்தை நெருங்கியுள்ள நிலையில், அடுத்தகட்டமாகப் பல வாரங்கள் நீடிக்கக்கூடிய வகையிலான தரைவழி இராணுவ நடவடிக்கைகளை (Ground Operations) முன்னெடுக்க அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பெண்டகன் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க உயர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ‘வொஷிங்டன் போஸ்ட்’ (Washington Post) வெளியிட்டுள்ள இந்தச் செய்தி, ஏற்கனவே கொதிநிலையில் இருக்கும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதல் ஒரு முழு அளவிலான ஆக்கிரமிப்பாக (Invasion) அன்றி, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் கைப்பற்றும் விரிவான சோதனைகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிகாரிகளின் தகவல்படி, இந்தத் தரைவழி நடவடிக்கையில் அமெரிக்காவின் சிறப்புப் படைகள் (Special Operations Forces) மற்றும் தரைப்படை காலாட்படையினர் (Infantry) ஈடுபடுத்தப்படலாம். குறிப்பாக, ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான ‘கார்க் தீவு’ (Kharg Island) மற்றும் ஹார்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள கடலோர இராணுவத் தளங்களைக் கைப்பற்றுவது குறித்து பெண்டகன் தீவிரமாக ஆலோசித்து வருகின்றது. சர்வதேசக் கடல் வணிகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஈரானின் ஏவுகணைத் தளங்களை அழிப்பதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சுமார் 50,000-க்கும் அதிகமான அமெரிக்கப் படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், ‘யுஎஸ்எஸ் திரிப்போலி’ (USS Tripoli) போன்ற நவீன போர்க்கப்பல்களும் தயார் நிலையில் உள்ளன. இருப்பினும், இந்தத் தரைவழித் தாக்குதல் திட்டத்திற்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்னும் இறுதி ஒப்புதல் வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு மத்தியில் அமெரிக்க வீரர்களைத் தரைப்போர் களத்தில் இறக்குவது அதிக ஆபத்தானது என்பதால், வெள்ளை மாளிகை இதனைத் தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றது.
இந்தத் தரைவழித் தாக்குதல் திட்டமிடல் குறித்துப் பெண்டகன் இன்னும் உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை. “அதிபர் எடுக்கும் முடிவுகளுக்குத் தேவையான அனைத்து இராணுவத் தெரிவுகளையும் (Optionality) தயார் நிலையில் வைத்திருப்பது எமது கடமை” என வெள்ளை மாளிகை ஊடகப் பேச்சாளர் கரோலின் லெவிட் (Karoline Leavitt) தெரிவித்துள்ளார். ஒருவேளை இந்தத் தரைப்போர் ஆரம்பமானால், அது ஈரானுடனான போரின் மிக ஆபத்தான மற்றும் தீர்மானமிக்க ஒரு கட்டமாக அமையும் என அரசியல் மற்றும் இராணுவ ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.