மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகப் பொருளாதாரத்திலும் பங்குச்சந்தைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இன்று (9) காலை வர்த்தகத்தில் பாகிஸ்தான் பங்குச்சந்தை (PSX) வரலாற்றிலேயே இல்லாத வகையில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. ஆரம்ப வர்த்தகத்திலேயே சந்தையின் முக்கிய குறியீடான KSE-100, சுமார் 9,780 புள்ளிகள் (6.21%) வீழ்ச்சியடைந்து, 147,715.95 புள்ளிகளாகக் குறைந்தது. சந்தையில் நிலவிய இந்த அதீத விற்பனை அழுத்தத்தைத் தொடர்ந்து, விதிமுறைகளின்படி வர்த்தகம் 45 நிமிடங்களுக்குத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
பாகிஸ்தான் பங்குச்சந்தையின் இந்த வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் பதற்றங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் போக்குவரத்து முடக்கம் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை திடீரென 30 சதவீதம் வரை உயர்வடைந்தமை, முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பீதியை உருவாக்கியுள்ளது. போரினால் ஏற்படும் எரிசக்தி விநியோகச் சங்கிலி பாதிப்பு, பாகிஸ்தான் போன்ற இறக்குமதி சார்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் நாணயப் பெறுமதி மற்றும் பணவீக்கத்தை நேரடியாகப் பாதிக்கும் என்ற அச்சமே இந்த விற்பனை சரிவுக்கு முக்கிய தூண்டுதலாக அமைந்தது.
சர்வதேச பங்குச்சந்தைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில், ஆசியாவின் ஏனைய நாடுகளான ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் பங்குச்சந்தைகளும் இன்று பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. பாகிஸ்தானைப் பொறுத்தவரை, அரசு எரிபொருள் விலைகளை வரலாற்றில் இல்லாத அளவிற்கு உயர்த்தியிருப்பதும், போர் சூழலால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளைக் கட்டுப்படுத்த சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் தளர்த்தியுள்ளது. சந்தை மீண்டும் தொடங்கிய பின்னரும் கடும் விற்பனை அழுத்தம் தொடர்ந்ததால், முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட்டு வருகின்றனர்.
இந்த மோதல் சூழல் தற்காலிகமானதா அல்லது நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்துமா என்பது குறித்துப் பொருளாதார நிபுணர்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். போர் தீவிரமடைந்து வரும் நிலையில், எரிபொருள் விலையேற்றம் மற்றும் வர்த்தகப் பாதிப்புகள் எதிர்காலத்தில் நாட்டின் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளை எவ்வாறு பாதிக்கும் என்பது தற்போதைய முக்கிய விவாதமாக உள்ளது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி நகர்வதால், பங்குச்சந்தையில் நிலவும் இந்த ஏற்ற இறக்கம் குறுகிய காலத்தில் முடிவுக்கு வருவது கடினம் எனச் சந்தை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.