ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 250 பேர் காயமடைந்துள்ளதாகவும் தலிபான் அரசாங்கம் அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை இரவு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அரசின் துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபித்ரத் உறுதிப்படுத்தியுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான குறித்த மருத்துவமனையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக ஆப்கானிஸ்தான் சுகாதாரத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஷராபத் ஸமான் தெரிவித்துள்ளார். இத்தாக்குதலால் மருத்துவமனை கட்டடம் பாரியளவில் சேதமடைந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகளிலும், தீயை அணைக்கும் பணிகளிலும் மீட்புக்குழுவினர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளைத் தாம் இலக்கு வைக்கவில்லை என பாகிஸ்தான் இந்தத் தகவலை மறுத்துள்ளது. இருப்பினும், காபூல் மற்றும் ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதிகளில் தங்கள் தரப்பால் வான்வழித் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகப் பாகிஸ்தான் தரப்பு வாதிடுகின்றது.
இந்தச் சம்பவமானது ஏற்கனவே பதற்றமாக உள்ள ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லை உறவுகளில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மருத்துவமனையை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் சர்வதேச மனிதநேயச் சட்டங்களை மீறுவதாக தலிபான் அரசு குற்றம் சுமத்தியுள்ளது. இத்தாக்குதல் குறித்த மேலதிக விபரங்கள் மற்றும் சர்வதேச நாடுகளின் எதிர்வினைகள் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

