இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.
பதிவான மொத்த வழக்குகளில் 35 வழக்குகள் சிறுவர்களை உள்ளடக்கியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் பொறியியலாளர் சாருக்க தமுனுபொல ஆங்கில ஊடகமொன்றுக்குக் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்களை இணையக் குற்றங்கள் தொடர்பான அபாயங்களிலிருந்து பாதுகாக்க வலுவான நடவடிக்கைகள் அவசரமாகத் தேவைப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இலங்கையில் இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது மற்றும் சிறுவர்களை இணையத் தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளிலிருந்து பாதுகாப்பது குறித்தும் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இந்தத் தரவுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

