இலங்கையில் கடந்த 2025-ம் ஆண்டில் சமூக ஊடகத் தவறான பயன்பாடு மற்றும் இணைய பாதுகாப்பு தொடர்பான 12,650-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (Sri Lanka CERT) தெரிவித்துள்ளது.
இலங்கை CERT இன் முன்னணி தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருகா தமுனுபோல இது குறித்துத் தெரிவிக்கையில், முந்தைய ஆண்டுகளை விட ஆன்லைன் மோசடிகள் மற்றும் சைபர் துன்புறுத்தல்கள் பாரிய அளவில் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
போலி கணக்குகள் (Fake Profiles), கணக்குகள் முடக்கப்படுதல் (Hacking) மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள். வெறுக்கத்தக்க பேச்சுக்கள், பெரியவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்புதல் (Misinformation).
இணைய பாதுகாப்பு குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லாத இளைஞர்கள், முதியவர்கள் மற்றும் புதிதாக இணையத்தைப் பயன்படுத்துபவர்களே இலக்கு வைக்கப்படுகின்றனர்.
சைபர் குற்றவாளிகள் நாளுக்கு நாள் அதிநவீன முறைகளைக் கையாளுவதால், பொதுமக்கள் பின்வரும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். நிதி விபரங்கள் அல்லது அந்தரங்கத் தகவல்களை ஆன்லைனில் பகிர்வதைத் தவிர்க்கவும்.
வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்துவதுடன், இரு காரணி அங்கீகாரத்தை (Two-Factor Authentication) நடைமுறைப்படுத்தவும். சந்தேகத்திற்கிடமான செய்திகள் அல்லது இணைய இணைப்புகளை (Links) உறுதிப்படுத்தாமல் கிளிக் செய்ய வேண்டாம்.
சைபர் பாதுகாப்பு தொடர்பான சம்பவங்களைப் புகாரளிக்க அல்லது உதவி பெற பொதுமக்கள் 101 தொலைபேசி எண், report@cert.gov.lk மின்னஞ்சல் வழிகளைப் பயன்படுத்தலாம்:
தேசிய அளவில் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதிப்படுத்த, பொலிஸார் மற்றும் ஏனைய சேவை வழங்குநர்களுடன் இணைந்து இலங்கை CERT தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.