கனமழை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு; புத்தளம் மக்களுக்கு எச்சரிக்கை!

25 68f59693a092d

பெய்து வரும் கனமழை காரணமாக தெதுரு ஓயா, ராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 02 வான்கதவுகள் தலா 02 அடி மற்றும் மேலும் 02 வான்கதவுகள் தலா 04 அடி உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளன.

திறக்கப்பட்டுள்ள 04 வான்கதவுகளில் இருந்து தெதுரு ஓயாவிற்கு வினாடிக்கு 8100 கன அடி நீர் வெளியேற்றப்படும் என்றும் நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது. இதேவேளை ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் தலா 06 அடி வீதம் 06 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

திறக்கப்பட்டுள்ள இந்த வான்கதவுகளில் இருந்து கலா ஓயாவிற்கு வினாடிக்கு 7206 கன அடி நீர் வெளியேற்றப்படுகின்றன. இதற்கிடையில், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 02 தானியங்கி வான்கதவுகளும் தலா 05 அடி திறக்கப்பட்டுள்ளன.

திறக்கப்பட்ட வான் கதவுகளிலிருந்து கலா ஓயாவிற்கு வினாடிக்கு 2940 கன அடி நீர் வெளியேற்றப்படும் என்று நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

திறக்கப்பட்ட வான் கதவுகளிலிருந்து வெளியேற்றப்படும் நீர் கலா ஓயா மற்றும் தெதுரு ஓயாவிற்குள் பாயும் என்பதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக செயல்படுமாறு புத்தளம் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

Exit mobile version