மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் புனாணை 126 மைல் கல் பகுதியில் நேற்று சனிக்கிழமை (31) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ரிதிதென்னையைச் சேர்ந்த சம்சுதீன் முஹம்மது நவாஸ் என்பவரே இந்த விபத்தில் பலியானவர் ஆவார்.
நேற்று இரவு 7.00 மணியளவில் பொலன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கிப் பயணித்த மகேந்திரா ரக சிறிய மீன் லொறியும், ஓட்டமாவடியில் இருந்து ரிதிதென்ன நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் புனாணை பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற நவாஸ் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தை அடுத்து உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. விபத்துடன் தொடர்புடைய மீன் லொறியின் சாரதியை வாழைச்சேனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

