சர்ச்சைக்குரிய ‘ஒன்டன்செட்ரோன்’ (Ondansetron) தடுப்பூசி செலுத்தப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் சில நோயாளிகளுக்கும் உடல்நலச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (19) பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க முன்வைத்த குற்றச்சாட்டுகள்.
ஒன்டன்செட்ரோன் மருந்திற்குள் பக்டீரியா காணப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவே நோயாளிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு முக்கிய காரணமாகும்.
மருத்துவ விநியோகப் பிரிவின் இணையத்தளத் தரவுகளின்படி, இந்த ஆண்டில் மட்டும் தரக் குறைபாடுகள் காரணமாக சுமார் 90 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தற்போதைய சர்ச்சைக்குரிய நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட மேலும் 9 மருந்துகள் தற்போது பாவனையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளன.
தரம் குறைந்த மருந்துகளை நாட்டிற்கு இறக்குமதி செய்தமை தொடர்பில் சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவை தமது பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது என GMOA வலியுறுத்தியுள்ளது. இது மக்களின் உயிருடன் விளையாடும் பாரதூரமான விடயம் எனவும், உடனடியாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

