நியூயோர்க் நகரின் குயின்ஸ் பகுதியில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்திற்கு முன்னால் நடைபெற்ற போராட்டத்தின் போது, ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீன விடுதலைக்கான கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டத்தின் போது, “நாங்கள் ஹமாஸை ஆதரிக்கிறோம்” போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டதாகத் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் ஆதரவாளர்களும் அங்கு திரண்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதுடன், இஸ்ரேல் ஆதரவாளர்கள் தரப்பில் இனவாதச் சொற்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தை நியூயோர்க் மாநகர முதல்வர் சொஹ்ரான் மம்தானி மற்றும் பல முக்கிய தலைவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
“பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவான முழக்கங்களுக்கு நியூயோர்க்கில் இடமில்லை. வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும்” என மம்தானி தெரிவித்தார்.
நியூயோர்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல், சட்டமா அதிபர் லெட்டிடியா ஜேம்ஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்சாந்த்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் ஆகியோர் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
போராட்டங்களை நடத்த அரசியலமைப்பு உரிமை இருந்தாலும், மத வழிபாட்டுத் தலங்களின் அமைதிக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிப்பதை அனுமதிக்க முடியாது என அவர்கள் ஒருமனதாகத் தெரிவித்துள்ளனர்.
யூத மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இத்தகைய வெறுப்புணர்வூட்டும் கருத்துகளைப் பரப்புவது சமூக அமைதிக்கு ஆபத்தானது என அரசியல் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.