இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய அமைப்பு இயக்குநரகம் (NSO), 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்காக (ஏப்ரல் – ஜூன்) மேலதிகமாக 15% மின் கட்டண உயர்வைச் சமர்ப்பித்துள்ளது. ஏற்கனவே ஏப்ரல் 01 முதல் 10% கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது விடுக்கப்பட்டுள்ள இந்த மேலதிக கோரிக்கை நுகர்வோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தப்பட்ட விநியோக அட்டவணை மற்றும் அண்மைய எரிபொருள் விலை மாற்றங்களுக்கு அமைய, மின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள NSO நிறுவனம், இதற்கான திருத்தப்பட்ட முன்னறிவிப்புகளை கடந்த 06 ஏப்ரல் 2026 அன்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் (PUCSL) சமர்ப்பித்திருந்தது. முன்னதாக, இலங்கை மின்சார சபை 13.56% உயர்வைக் கோரியிருந்த போதிலும், ஆணைக்குழு 10% உயர்விற்கே அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மின் கட்டண உயர்வால் பாதிக்கப்படக்கூடிய குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறிப்பாக, மத்திய கிழக்கு போர் நெருக்கடியால் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட மற்றும் மாதமொன்றுக்கு 90 அலகுகளுக்கும் (Units) குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
இந்த விசேட பொருளாதார நிவாரணத் திட்டத்திற்காக அரசாங்கம் 15 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாக ஜனாதிபதி நேற்று நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். மின் கட்டண உயர்வால் சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், தேசிய அமைப்பு இயக்குநரகத்தின் புதிய 15% உயர்வு கோரிக்கை தொடர்பில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு இதுவரை இறுதி முடிவை அறிவிக்கவில்லை.