தென் அமெரிக்காவின் மிகவும் தேடப்படும் போதைப்பொருள் கடத்தல் மன்னர்களில் ஒருவரான உருகுவேயைச் சேர்ந்த செபாஸ்டியன் மார்செட் (Sebastián Marset), பொலிவியாவில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிவியாவின் சாண்டா குரூஸ் டி லா சியரா (Santa Cruz de la Sierra) நகரில் நேற்று (13) அதிகாலை இடம்பெற்ற அதிரடி காவல் துறை நடவடிக்கையின் மூலம் அவர் சிக்கியுள்ளார். நீண்டகாலமாக பொலிஸ் தேடுதலில் இருந்து தப்பித்து வந்த இவரை, நூற்றுக்கணக்கான பொலிஸார் சூழந்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சில மணிநேரங்களிலேயே, அவர் அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அமெரிக்காவின் போதைப்பொருள் தடுப்பு முகமையின் (DEA) தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் முன்னணியில் இருந்த மார்செட் மீது, பணமோசடி மற்றும் சர்வதேச அளவில் பல தொன் கணக்கிலான கொகைன் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க நீதியமைச்சின் உத்தரவின் பேரிலேயே இந்த நாடுகடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிவிய உள்நாட்டமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
34 வயதான மார்செட், “தெற்கின் மன்னன்” (King of the South) என்று தன்னைத்தானே அழைத்துக்கொண்டவர். இவர் தனது போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய சட்டவிரோதப் பணத்தைப் பயன்படுத்தி, கால்பந்து அணிகளை வாங்கிப் பராமரிப்பதையும், தானே சில அணிகளில் வீரராக விளையாடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர் பராகுவேயின் முக்கிய வழக்கறிஞர் மார்செலோ பெக்கி (Marcelo Pecci) படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்திலும் தேடப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்செட்டின் கைது மற்றும் நாடுகடத்தல் நடவடிக்கையை பொலிவிய ஜனாதிபதி ரோட்ரிகோ பாஸ் (Rodrigo Paz), பிராந்தியத்தில் திட்டமிட்ட குற்றங்களுக்கு எதிரான போரில் ஒரு முக்கியமான மைல்கல் எனப் பாராட்டியுள்ளார். சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு, பொலிவியா தற்போது அமெரிக்காவின் போதைப்பொருள் தடுப்பு முகமையுடன் இணைந்து மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், இக்கைது நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.