புனரமைப்புப் பணிகள் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்த வடக்கு ரயில் மார்க்கம், தற்போது ரயில் போக்குவரத்திற்கு முழுமையாகத் தயார் நிலையில் உள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, நாளை மறுதினம் (டிசம்பர் 24) முதல் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான நேரடி ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை யாழ்தேவி ரயில் வழமை போன்று சேவையில் ஈடுபடுத்தப்படும்.
பயணிகள் தங்களது பயணங்களை இலகுவாக்கும் வகையில், யாழ்தேவி ரயிலில் முதலாம் வகுப்பு (குளிரூட்டப்பட்ட – AC) மற்றும் இரண்டாம் வகுப்பு ஆசனங்களை முற்பதிவு செய்வதற்கான வசதிகளும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நீண்ட நாட்களுக்குப் பிறகு வடக்கு மற்றும் தெற்கை இணைக்கும் நேரடி ரயில் போக்குவரத்து வழமைக்குத் திரும்புவது, பண்டிகைக் காலத்தில் பயணம் செய்யும் பொதுமக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

