இலங்கைக் கடல் எல்லைக்குள் இந்தியக் கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து முன்னெடுக்கும் அடாவடித்தனங்கள் குறித்து அரசாங்கமும், கடற்றொழில் அமைச்சும் பாராமுகமாக இருப்பது வேதனையளிப்பதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் காரசாரமான கருத்துக்களை முன்வைத்தார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாகப் பலமுறை கோரிக்கைகளை முன்வைத்தும், தற்போதைய அரசாங்கமும் கடற்றொழில் அமைச்சரும் மௌனம் காப்பது ஏன் என்று தெரியவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் (மு.க. ஸ்டாலின்) உண்மையிலேயே நினைத்திருந்தால், இந்தியக் கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி வருவதை இலகுவாகக் கட்டுப்படுத்தியிருக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ச்சியான இந்திய மீனவர்களின் வருகை மற்றும் அவர்களின் சட்டவிரோதத் மீன்பிடி முறைகளால் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கவலை வெளியிட்டார்.
யாரிடம் முறையிடுவது என்று தெரியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம். இந்த அடாவடித்தனம் வடபகுதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

