மறைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முன்வைத்த அரசியல் நம்பிக்கைகள், தற்போதைய ஆட்சியின் கீழ் கேள்விக்குறியாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
சம்பந்தன் ஐயா ஒரு காலத்தில் கூறிய தை பிறந்தால் வழி பிறக்கும் அல்லது தீபாவளிக்குள் தீர்வு போன்ற கருத்துக்கள் விமர்சிக்கப்பட்டாலும், அதன் பின்னணியை சாணக்கியன் விளக்கினார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது அரசியல் தீர்வை எட்டுவதற்கான உண்மையான மற்றும் தீவிரமான நகர்வுகள் இடம்பெற்றன. அந்தச் சூழல் வழங்கிய நம்பிக்கையிலேயே சம்பந்தன் அத்தகைய கருத்துக்களைத் தெரிவித்ததாக சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடமாகியும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என அவர் சாடியுள்ளார்.
ஜனநாயகத்தின் முக்கிய அங்கமான மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படவில்லை. ஒரு தெரிவுக்குழுவை நியமித்து, தேர்தலை எப்படி நடத்துவது என்று இன்னும் ஆராய்ச்சி மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள் என அவர் குற்றம் சாட்டினார்.
ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் பேசும்போது வரவேற்கத்தக்க விடயங்களைக் கூறினாலும், நடைமுறையில் தமிழ் மக்களுக்கு எதிரான செயல்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றன என அவர் தெரிவித்தார்.
கடந்த கால அரசாங்கங்களை விடவும் மோசமான முறையில் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இப்போதைய ஆட்சியிலும் தொடர்வதாகக் குறிப்பிட்ட சாணக்கியன், வெறும் வார்த்தைகளால் ஏமாற்றாமல் காத்திரமான அரசியல் தீர்வை நோக்கி அரசாங்கம் நகர வேண்டும் என வலியுறுத்தினார்.