இலங்கையில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள் அல்லது சர்வதேச அளவில் ஏற்படும் பொருளாதார அதிர்ச்சிகளை எதிர்கொள்வதற்கான நிதி வலிமை தற்போது நாட்டிடம் இல்லை என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பகுதியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டின் தற்போதைய நிதி நிலைமை குறித்து புள்ளிவிபரங்களை முன்வைத்தார்:
அரசாங்கத்தின் இந்த வருட வருமானம் 5.3 டிரில்லியன் ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அரசாங்கத்தின் மீளெழும் செலவினம் (Recurrent Expenditure) 5.6 டிரில்லியன் ரூபாயாக உள்ளது.
இதன்படி, அரசாங்கத்தின் அடிப்படைச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கே சுமார் 300 முதல் 400 பில்லியன் ரூபாய் வரை பற்றாக்குறை நிலவுகிறது.
நாட்டில் மண்சரிவு, சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டாலோ அல்லது வெளிநாடுகளில் ஏற்படும் யுத்தங்கள் போன்ற வெளிப்புறத் தாக்கங்கள் ஏற்பட்டாலோ, அந்த அதிர்வுகளை எதிர்கொள்ளத் தேவையான நிதி இருப்பு இலங்கையிடம் இல்லை.
“எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ரூபாயோ அல்லது சர்வதேச கொடுக்கல் வாங்கல்களுக்கான டொலர்களோ எம்மிடம் போதுமான அளவு இல்லை என்பதே நிதர்சனம்” என அவர் மேலும் குறிப்பிட்டார். நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சவால்களைக் கையாள்வதற்கு முறையான நிதி முகாமைத்துவம் அவசியம் என்பதையும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.