பிரித்தானியாவின் புதிய எல்லைக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் எதிர்வரும் பிப்ரவரி 25 முதல் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளன. இதன்படி, பிரித்தானியாவின் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் அந்நாட்டிற்குள் நுழையும்போது இனி கண்டிப்பாகப் பிரித்தானிய கடவுச்சீட்டை (British Passport) சமர்ப்பிக்க வேண்டும். இந்த விதிமுறை குறிப்பாகப் பெண்களுக்குப் பாரபட்சமாக அமைந்துள்ளதாகப் பெண்ணுரிமை அமைப்புகள் மற்றும் குடியேற்றவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
புதிய விதிகளின்படி, பிரித்தானிய கடவுச்சீட்டு இல்லாதவர்கள் சுமார் 589 பவுண்ட் (சுமார் 2.3 லட்சம் இலங்கை ரூபாய்) செலவில் “Certificate of Entitlement” எனும் சான்றிதழைத் தங்களது இரண்டாவது நாட்டின் கடவுச்சீட்டில் இணைக்க வேண்டும். இதன்போது இரண்டு கடவுச்சீட்டுகளிலும் பெயர்கள் துல்லியமாகப் பொருந்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதான் பெண்களுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகக் கிரேக்கம் மற்றும் ஸ்பெயினில் வசிக்கும் பெண்களுக்கு இது பெரும் சவாலாக மாறியுள்ளது.
கிரேக்கச் சட்டப்படி, திருமணத்திற்குப் பிறகும் பெண்கள் தங்களது பிறந்த வீட்டுப் பெயரையே வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்களின் பிரித்தானிய கடவுச்சீட்டில் கணவரின் பெயர் இருந்தால், பெயர்கள் வேறாக இருக்கும். அதேபோல், ஸ்பெயின் சட்டப்படி ஒருவருக்கு இரண்டு குடும்பப் பெயர்கள் இருக்கும், ஆனால் பிரித்தானிய ஆவணங்களில் ஒரு பெயரே இருக்கும். இந்தப் பெயர்ப் பொருத்தமின்மை காரணமாக விமான நிறுவனங்கள் அவர்களை ஏற்றிச்செல்ல மறுக்கும் அபாயம் உள்ளது. இந்த விதியிலிருந்து ஐரிஷ் (Irish) கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிக்கல்கள் குறித்துப் பதிலளித்துள்ள பிரித்தானிய உள்துறை அமைச்சு (Home Office), பெயர்ப் பொருத்தமின்மை தொடர்பான சிக்கல்களைத் தனிப்பட்ட முறையில் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு ஆவணங்களில் பெயர்களை மாற்ற முடியாது என்பதற்கான முறையான ஆதாரங்களைச் சமர்ப்பித்தால் விதிவிலக்கு அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், பிப்ரவரி 25-க்கு முன்னதாகத் தங்களது ஆவணங்களைச் சரிபார்க்குமாறு இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களை அரசு அறிவுறுத்தியுள்ளது.

