நாட்டில் நிலவி வரும் எரிசக்தி நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, எரிபொருள் மற்றும் மின்சாரத்தை மிகச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான விசேட வழிகாட்டல்களை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ளார். அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உட்பட அரச நிறுவனத் தலைவர்களுக்கு இந்த அறிவுறுத்தல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேசிய ரீதியில் எரிசக்தி நுகர்வைக் குறைத்து, அத்தியாவசியத் தேவைகளுக்கான விநியோகத்தை உறுதிப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.
இதன்படி, அரச அதிகாரிகள் தமது கடமைகளுக்குத் தனிப்பட்ட வாகனங்களைத் தவிர்த்து, பொதுப் போக்குவரத்து அல்லது குழுவாக இணைந்து பயணிக்கும் (Carpooling) முறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெளிக்களக் கடமைகளுக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க, முறையான நாளாந்தப் போக்குவரத்துத் திட்டங்களைத் தயாரிக்குமாறு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரச வாகனங்களுக்கான எரிபொருள் செலவினத்தை பெருமளவில் கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின்சாரப் பயன்பாட்டைக் குறைப்பது தொடர்பிலும் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அலுவலகங்களில் மின்விளக்குகளுக்குப் பதிலாக இயற்கை வெளிச்சத்தைப் பயன்படுத்துமாறும், குளிரூட்டிகளின் பயன்பாட்டைக் குறைத்து மின்விசிறிகளைப் பயன்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது. மேலும், அவசியமற்ற நேரங்களில் மின்தூக்கிகள் (Lifts) மற்றும் வீதி விளக்குகளை அணைத்து வைக்குமாறும், பாதுகாப்பு முக்கியத்துவம் இல்லாத பகுதிகளில் மின்விநியோகத்தைத் தற்காலிகமாகச் சீரமைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.