புதிய பேருந்து கட்டண அதிகரிப்பு: நாளை முதல் வழக்கம் போல் பேருந்து சேவைகள்!

17 19

இலங்கையில் இன்று (மார்ச் 23, 2026) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்களை 12.19 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. இந்த அதிகரிப்பு தற்போதைய சூழலில் போதுமானதாக இருப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து சேவைகள் நாளை (24) முதல் நாடு முழுவதும் வழக்கம் போல் முன்னெடுக்கப்படும் என அவர் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இது குறித்துத் தெரிவிக்கையில், டீசல் விலை அண்மையில் லிட்டருக்கு 79 ரூபாயால் அதிகரிக்கப்பட்டதையடுத்து, தேசிய பேருந்து கட்டணக் கொள்கையின்படி இந்தக் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். புதிய திருத்தத்தின்படி, 27 ரூபாவாக இருந்த ஆகக்குறைந்த பேருந்து கட்டணம் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 30 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தூர இடங்களுக்கான அதிகப்பட்ச கட்டணமாக இருந்த 2,159 ரூபா, தற்போது 263 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 2,422 ரூபாவாக உயர்ந்துள்ளது.

புதிய கட்டண உயர்வு அமுலுக்கு வந்துள்ள நிலையில், பயணிகளிடம் நிர்ணயிக்கப்பட்ட சரியான கட்டணத்தை மாத்திரம் வசூலிக்குமாறு இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்குத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) கண்டிப்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அனைத்துப் பேருந்துகளிலும் புதிய கட்டணப் பட்டியலைக் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தமக்கான பயணச் சீட்டுகளைக் கட்டாயம் பெற்றுக்கொள்ளுமாறும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட மேலதிகமாகப் பணம் வசூலிக்கப்பட்டால் அது குறித்து உடனடியாக முறைப்பாடு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதற்காகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற உடனடித் தொலைபேசி இலக்கத்தையோ அல்லது 0712595555 என்ற வட்ஸ்அப் (WhatsApp) இலக்கத்தையோ தொடர்பு கொண்டு முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும்.

Exit mobile version