மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அதற்கு ஆதரவான ஆயுதக் குழுக்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள போரில், சர்வதேசத் தலைவர்கள் அனைவரும் தங்களது ஆதரவை வழங்கி ஒன்றிணைய வேண்டும் என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலின் தெற்கு நகரமான ஆராத் (Arad) பகுதியில் நேற்று இரவு ஈரானிய ஏவுகணைத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட இடத்தைப் பார்வையிட்ட பின்னர், அங்கிருந்து ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இன்று (மார்ச் 22, 2026) ஆராத் நகரில் சேதமடைந்த குடியிருப்புப் பகுதிகளை ஆய்வு செய்த நெதன்யாகு, ஈரானின் அச்சுறுத்தல் என்பது இஸ்ரேலுக்கு மட்டுமானதல்ல, அது முழு உலகிற்குமான சவால் எனத் தெரிவித்தார். “ஈரான் சிவிலியன்களை இலக்கு வைத்து இத்தகைய கொடூரமான தாக்குதல்களை நடத்துகிறது. கடந்த 48 மணிநேர நிகழ்வுகள், ஈரான் எத்தகைய ஆபத்தான நாடு என்பதற்குப் போதுமான ஆதாரங்களை உலகிற்கு வழங்கியுள்ளன” என அவர் சுட்டிக்காட்டினார். ஆராத் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 80 முதல் 115 பேர் வரை காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து உரையாற்றிய அவர், “ஈரான் தற்போது 4,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டியாகோ கார்சியா (Diego Garcia) தளத்தைத் தாக்கும் வல்லமையைப் பெற்றுள்ளது. இதன் மூலம் அவர்கள் ஐரோப்பாவின் உட்பகுதிகள் வரை எட்டிப் பார்க்கும் திறனை அடைந்துள்ளார்கள் என்பதை உலகத் தலைவர்கள் உணர வேண்டும். அவர்கள் சர்வதேசக் கடல்சார் பாதைகளை முடக்கி, உலக நாடுகளைப் பிணைக் கைதிகளாக வைத்து மிரட்டப் பார்க்கிறார்கள். இந்தத் தீய சக்தியைத் தடுப்பது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கடமை மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாகரிக உலகின் பொறுப்பாகும்” எனத் தெரிவித்தார்.
ஏற்கனவே சில நாடுகள் இந்த இராணுவ நடவடிக்கையில் மறைமுகமாகவும் நேரடியாகவும் ஒத்துழைப்பு வழங்கி வருவதைப் பாராட்டிய நெதன்யாகு, ஏனைய ஜனநாயக நாடுகளும் தயக்கமின்றி இந்தத் தர்ம யுத்தத்தில் இணைய வேண்டும் என வலியுறுத்தினார். ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் ஏவுகணைத் தயாரிப்பு மையங்களை முழுமையாக அழிப்பதே தமது இலக்கு என்றும், ஈரானிய மக்கள் இந்த அடக்குமுறை ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கான சூழலை உருவாக்குவோம் என்றும் அவர் மீண்டும் உறுதிபடத் தெரிவித்தார்.

