மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக்கில் நிலைநிறுத்தப்பட்டிருந்த நேட்டோ (NATO) அமைப்பின் ஆலோசனைக் குழு அங்கிருந்து முழுமையாக வெளியேறியுள்ளது. ஹோர்முஸ் நீரிணையை ஈரானின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க அமெரிக்கா தனது நேட்டோ நட்பு நாடுகளின் ஆதரவைக் கோரியிருந்தது. இருப்பினும், எந்தவொரு நாடும் இதற்கு முழுமையான இராணுவ ஆதரவை வழங்க முன்வராத சூழலில், ஈராக்கில் உள்ள வெளிநாட்டு இராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
குறிப்பாக, ஈராக்கில் உள்ள பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் இத்தாலிய இராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, அங்கு பணியாற்றி வந்த நேட்டோ ஆலோசனைக் குழுவை வெளியேற்ற அந்த அமைப்பு தீர்மானித்தது. இந்தக் குழுவின் கடைசித் துருப்புக்கள் நேற்று ஈராக்கை விட்டு வெளியேறியதாக நேட்டோ உயர்மட்டத் தளபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக ஐரோப்பாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியேறியுள்ள இந்த ஆலோசனைக் குழுவானது ஒரு போர் சாரா (Non-combat) அமைப்பாகும். ஈராக் பாதுகாப்புப் படைகளுக்குக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், இராணுவப் படைகளை மேம்படுத்துதல் மற்றும் வியூகங்கள் வகுத்தல் போன்ற ஆலோசனைகளை வழங்குவதற்காகவே இது செயல்பட்டு வந்தது. ஈரானின் நேரடித் தாக்குதல்களால் ஆலோசனைக் குழுவினரின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில், இந்த ஆலோசனைக் குழுவானது இத்தாலியின் நோபிள் (Naples) நகரில் அமைந்துள்ள நேட்டோவின் கூட்டுப் படைக் கட்டளைத் தலைமையகத்திலிருந்து (Joint Force Command) தனது பணிகளைத் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈராக்கிலிருந்து நேட்டோ வெளியேறியிருப்பது, அந்தப் பிராந்தியத்தில் மேற்கத்திய நாடுகளின் செல்வாக்கு குறைவதையும், ஈரானின் ஆதிக்கம் அதிகரித்து வருவதையும் காட்டுவதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.