நிலவை நோக்கிய மனிதனின் வரலாற்றுப் பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக, நாசாவின் ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்கலம் தனது 10 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு வெற்றிகரமாகப் பூமிக்குத் திரும்பியுள்ளது. நான்கு விண்வெளி வீரர்களுடன் சென்ற ஓரியன் (Orion) விண்கலம், நேற்று (ஏப்ரல் 10, 2026) மாலை 5:07 மணியளவில் கலிபோர்னியா கடற்கரைக்கு அப்பால் பசிபிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்குச் சென்ற முதல் மனிதப் பயணம் இது என்பதால், உலகம் முழுவதும் விண்வெளி ஆர்வலர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்பயணத்தின் போது ஆர்ட்டெமிஸ் II விண்கலம் பல தசாப்த கால விண்வெளி சாதனைகளை முறியடித்துள்ளது. குறிப்பாக, பூமியிலிருந்து சுமார் 252,756 மைல்கள் (406,771 கி.மீ) தூரம் பயணித்து, மனித விண்வெளி வரலாற்றில் மிகத் தொலைதூரப் பயணத்தை மேற்கொண்ட விண்கலம் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன்பு 1970-ல் அப்பல்லோ 13 (Apollo 13) விண்கலம் படைத்த சாதனையை முறியடித்துள்ளது. மேலும், நிலவின் மறுபக்கத்தை மனிதக் கண்களால் நேரடியாகப் பார்த்த முதல் குழுவாகவும், சூரிய கிரகணத்தை விண்வெளியில் இருந்து கண்ட முதல் வீரர்களாகவும் இக்குழுவினர் பதிவாகியுள்ளனர்.
இந்த வரலாற்றுப் பயணத்தில் நாசாவின் விண்வெளி வீரர்களான ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா கோச் மற்றும் கனடா விண்வெளி முகமையின் ஜெரமி ஹேன்சன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் விக்டர் குளோவர் நிலவுக்குச் சென்ற முதல் கறுப்பின வீரராகவும், கிறிஸ்டினா கோச் நிலவைச் சுற்றி வந்த முதல் பெண் வீரராகவும், ஜெரமி ஹேன்சன் நிலவுப் பயணத்தில் இணைந்த முதல் அமெரிக்கர் அல்லாத வீரராகவும் வரலாற்றுப் புத்தகங்களில் இடம் பிடித்துள்ளனர். இவர்களது 10 நாள் பயணம், மனித குலத்தின் அடுத்தகட்ட விண்வெளி ஆய்வுக்கான புதிய பாதையைத் திறந்துவிட்டுள்ளது.
பயணத்தின் இறுதியில், ஓரியன் விண்கலம் ஒலியை விட 30 மடங்கு வேகத்தில் வளிமண்டலத்திற்குள் நுழைந்தபோது சுமார் 3,000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைத் தாங்கி, அதன் வெப்பத் தடுப்புத் திரையின் வலிமையை நிரூபித்தது. “இது ஒரு மிகச்சரியானப் பயணம்” என நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் பாராட்டியுள்ளார். இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, 2028-ஆம் ஆண்டு நிலவில் மனிதர்களைத் தரையிறக்கும் ஆர்ட்டெமிஸ் III (Artemis III) திட்டத்திற்கான பணிகளை நாசா விரைவுபடுத்தியுள்ளது. எதிர்காலத்தில் நிலவில் தளம் அமைத்து ஆய்வு மேற்கொள்ளவும், அங்கிருந்து செவ்வாய் கிரகத்திற்குச் செல்லவும் இத்திட்டம் அடித்தளமிட்டுள்ளது.