நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பிரித்தானியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது, புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் (Oxford Union) மற்றும் கேம்பிரிட்ஜ் (Cambridge Union) விவாதச் சங்கங்களில் உரையாற்றுவதற்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்புகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரித்தானியாவில் உள்ள தமிழ் அமைப்புகள் மற்றும் மாணவர் சங்கங்களின் கடும் எதிர்ப்பு மற்றும் திட்டமிடப்பட்ட போராட்டங்கள் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, இறுதிப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் பின்னணியைக் குறிப்பிட்டு இந்த எதிர்ப்புக்கள் வலுத்திருந்தன.
இந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டமை குறித்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்டுள்ளார். ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் போன்ற தளங்கள் பல தலைமுறைகளாகத் துணிச்சலான விவாதங்கள் மற்றும் பகுத்தறிவு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஜனநாயக அடையாளங்களாகத் திகழ்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய புகழ்பெற்ற நிறுவனங்கள் திட்டமிட்ட குழுக்களின் அழுத்தங்களுக்குப் பணிந்து நிகழ்வுகளை ரத்து செய்வது, ஆரோக்கியமான விவாதக் கலாச்சாரத்தைப் பாதிக்கும் என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். கேம்பிரிட்ஜ் சங்கத்தில் உரையாற்றிய தனது சொந்த அனுபவத்தை நினைவு கூர்ந்த அவர், இத்தகைய தளங்கள் மாறுபட்ட கருத்துக்களை நேர்மையுடன் எதிர்கொள்ளும் அரிய வாய்ப்பை வழங்குகின்றன என்றார்.
எதிர்க்கருத்துக்களைக் கொண்டவர்களைச் சந்திக்கவும், அவர்களிடம் கேள்வி கேட்கவும் தயங்கக் கூடாது என்றும், அவ்வாறான குரல்களை அடக்குவது உண்மையான நல்லிணக்கத்திற்குத் தடையாக அமையும் என்றும் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார். இது போன்ற நடவடிக்கைகள் சிவில் சமூகத்தில் மேலும் பிளவுகளை ஏற்படுத்தும் என்றும், பல்கலைக்கழகங்கள் நிலைநிறுத்த விரும்பும் கருத்துச் சுதந்திரக் கொள்கைகளையே இது அழித்துவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதேவேளை, நாமல் ராஜபக்சவும் தனது உத்தியோகபூர்வ சமூக ஊடகத்தில், “திட்டமிட்ட அழுத்தங்கள் காரணமாக விவாதங்கள் நிறுத்தப்பட்டது வருத்தமளிக்கிறது” எனவும், “ஜனநாயகம் என்பது விவாதங்களால் வளர வேண்டுமே தவிர, குரல்வளை நெரிப்புகளால் அல்ல” எனவும் பதிவிட்டுள்ளார்.