அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

26 6990101d03ddb

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும் பாரிய நிதி ஆதாரங்கள் குறித்தும் விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு நெலும் மாவத்தையிலுள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், போராட்டத்தின் பெயரால் இளைஞர்களின் உணர்வுகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகச் சாடினார். “அன்று வீதிக்கு இறங்கித் தாக்குங்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறி இளைஞர்களைத் தூண்டியவர்கள் இன்று அரசாங்கத்தின் உயரிய பதவிகளில் அமர்ந்து அரசாள்கிறார்கள். ஆனால், அவர்களை நம்பி வீதிக்கு வந்த இளைஞர்கள் இன்று நீதிமன்றங்களையும் தூக்குமேடைகளையும் எதிர்கொள்கிறார்கள்” என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

இந்தப் போராட்டம் தன்னிச்சையாக உருவானது அல்ல என்றும், இதன் பின்னணியில் திட்டமிடப்பட்ட வெளிநாட்டுச் சக்திகளின் தலையீடு மற்றும் நிதிப் பரிமாற்றங்கள் இருப்பதாகவும் நாமல் சந்தேகம் வெளியிட்டுள்ளார். போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறைகள், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் (அமர கீர்த்தி அத்துகோரள) பகிரங்கமாக அடித்துக் கொல்லப்பட்டமை மற்றும் பொதுச்ொத்துக்கள் எரிக்கப்பட்டமை ஆகியவற்றுக்கு யார் பொறுப்பு என்பது கண்டறியப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஊழல் மற்றும் முறைகேடுகளை ஒழிப்பதாகக் கூறினால், முதலில் அரகலயவின் உண்மையான முகத்திரையைக் கிழிக்க வேண்டும் என அவர் சவால் விடுத்துள்ளார். இந்தப் போராட்டத்தை வழிநடத்தியவர்கள் மற்றும் அதற்குப் பின்னால் இருந்து இயக்கிய ‘சூத்திரதாரிகள்’ குறித்துத் தெளிவான விசாரணை நடத்தப்படாவிட்டால், எதிர்காலத்தில் இத்தகைய வன்முறைப் கலாச்சாரம் நாட்டைச் சீரழித்துவிடும் என அவர் எச்சரித்தார்.

 

 

Exit mobile version