பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் பகல் வேளையில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமானது, நாட்டின் பொதுமக்களின் பாதுகாப்பு எந்தளவுக்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்பதைக் காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமானது ஜனாதிபதி வசிக்கும் பகுதிக்கு மிக அருகிலேயே நடந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், ஒரு சட்டத்தரணிக்கே பகல் நேரத்தில் இந்த நிலை என்றால், சாதாரண பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். பொதுமக்களைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் அரசாங்கம் தனது அரசியல் இலக்குகளைச் சாதிக்க நினைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகச் செயல்படும் அரசியல் கட்சிகளை அடக்குவதற்கும், அவர்களை அச்சுறுத்துவதற்கும் இத்தகைய சூழல்கள் பயன்படுத்தப்படுவதாக நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். 1980-களின் காலப்பகுதியில் அச்சுறுத்தல் அரசியலில் ஈடுபட்டவர்களே தற்போதைய அரசாங்கத்திலும் ஆதிக்கம் செலுத்துவதால், அவர்களுக்கு ‘அச்சுறுத்தும் மொழி’ மட்டுமே தெரியும் என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.