தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அறிமுகமான முதல் தேர்தலிலேயே சுமார் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் சி. ஜோசப் விஜய்க்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அண்டை நாடான இலங்கையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, விஜய்யின் இந்தச் சாதனையை மனதாரப் பாராட்டியுள்ளார்.
இது குறித்து நாமல் ராஜபக்ஷ தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ (X) பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “திரு. சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு இந்த மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகள்! உண்மையான பணி இப்போதுதான் தொடங்குகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அரசியலில் வரவிருக்கும் சவால்களை வென்று, மக்களுக்கு அர்த்தமுள்ள பலன்களை வழங்குவதற்கான வலிமையையும் உறுதியையும் விஜய்க்கும் அவரது குழுவினருக்கும் விரும்புவதாகத் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
நாடுகளுக்கிடையிலான உறவு குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ஷ, இரு நாட்டு மக்களையும் பாதிக்கும் பொதுவான விடயங்களில் இலங்கையுடன் மேலும் வலுவான மற்றும் நேர்மறையான உறவை விஜய்யின் தலைமை உருவாக்கும் எனத் தான் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான இருதரப்பு ஈடுபாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத் தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி பெரும்பான்மைக்கு நெருக்கமாக இடங்களைப் பிடித்துள்ள நிலையில், இலங்கையைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தின் அரசியல் மாற்றங்கள் ஈழத் தமிழர்களின் விவகாரங்கள் மற்றும் இரு நாட்டு மீனவர் பிரச்சினைகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இலங்கை அரசியல்வாதிகள் உன்னிப்பாகக் கவனித்து வரும் சூழலில், நாமல் ராஜபக்ஷவின் இந்த வாழ்த்து முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது

