புது தில்லியில் நடைபெற்ற ‘இந்தியா டுடே கான்க்ளேவ் 2026’ (India Today Conclave 2026) நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் சவால்கள் குறித்துத் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். “இந்தியப் பெருங்கடல் பிளவுக் கோடு: இலங்கையின் புவிசார் அரசியல் சமநிலைச் சட்டம்” என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற அவர், அண்மைக்காலமாக இப்பிராந்தியத்தில் அதிகரித்து வரும் போர் பதற்றங்கள் குறித்துக் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்தார்.
இலங்கை கடல் எல்லைக்கு மிக அருகில் ஈரானியப் போர்க்கப்பலான ‘ஐரிஸ் தேனா’ (IRIS Dena) தாக்கி மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர், இது ஒரு ஆபத்தான முன்னுதாரணம் என்று குறிப்பிட்டார். சுமார் 80-க்கும் மேற்பட்ட ஈரானிய வீரர்கள் பலியான இந்தச் சம்பவம், சர்வதேச வர்த்தகப் பாதையாகக் கருதப்படும் இந்தியப் பெருங்கடலின் அமைதிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும். எமது கடல் எல்லைக்கு அருகில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள இலங்கைக்கு இறையாண்மை உரிமை உண்டு என்றும், இது குறித்து முறையான விளக்கங்களை இலங்கை கோர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மத்திய கிழக்கு போர்ச் சூழல் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்துக் கவலை வெளியிட்ட நாமல், எரிபொருள் இறக்குமதி, சுற்றுலா மற்றும் தேயிலை ஏற்றுமதி ஆகியவற்றுக்கு இலங்கை பெரிதும் மத்திய கிழக்கையே நம்பியுள்ளதை நினைவுபடுத்தினார். குறிப்பாக, ஈரானிய உயிர் பிழைத்தவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா போன்ற நாடுகள் விடுத்ததாகக் கூறப்படும் கோரிக்கைகளுக்குப் பதிலளித்த அவர், இலங்கை தனது மனிதாபிமானப் பொறுப்புகள் மற்றும் அணிசேரா வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையிலேயே சுயாதீன முடிவுகளை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
தனது உரையின் இறுதியில், இலங்கையில் சீனாவின் செல்வாக்கு குறித்த விமர்சனங்களை நிராகரித்த அவர், இலங்கை தனது மண்ணில் எந்தவொரு வெளிநாட்டு இராணுவத் தளங்களையும் அனுமதிக்காது என்பதை உறுதிபடத் தெரிவித்தார். இந்தியா, மாலத்தீவு உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் இணைந்து கடல்சார் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். அதேவேளை, கச்சத்தீவு விவகாரத்தில் 1974 ஒப்பந்தத்தின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய அவர், மீனவர் பிரச்சினைகளைத் தீர்க்கத் தமிழக அரசுடன் சிறந்த பேச்சுவார்த்தைகள் அவசியம் என்றார்.