ஈரான் மீதான போர் கடந்த பிப்ரவரி 28-ஆம் திகதி தொடங்கியதிலிருந்து, சர்வதேச நிதிச் சந்தைகளிலும், குறிப்பாக ‘முன்னறிவிப்புச் சந்தைகளிலும்’ (Prediction Markets) முன் எப்போதும் இல்லாத வகையில் சில சந்தேகத்திற்கிடமான வர்த்தகங்கள் நடைபெற்று வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அமெரிக்க அரசாங்கத்தின் மிக முக்கியமான இராணுவ மற்றும் வெளியுறவுக் கொள்கை முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்குச் சில நிமிடங்கள் அல்லது மணிநேரங்களுக்கு முன்னதாகவே, அந்த முடிவுகளைச் சரியாகக் கணித்து கோடிக்கணக்கான டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளமை உலக வர்த்தகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பாக, மார்ச் 23-ஆம் திகதி ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரான் மீதான தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவிப்பதற்குச் சுமார் 15 நிமிடங்களுக்கு முன்னதாக, ‘பாலிமார்க்கெட்’ (Polymarket) போன்ற தளங்களில் பாரிய அளவிலான பணயம் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ பிடிபட்ட நிகழ்வு மற்றும் ஈரான் மீதான முதல் தாக்குதல் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு முன்னரும், புதிதாக உருவாக்கப்பட்ட கணக்குகளில் இருந்து துல்லியமான கணிப்புகளுடன் வர்த்தகம் நடந்துள்ளது. இதன் மூலம் சில மர்ம நபர்கள் மில்லியன் கணக்கான டாலர்களை லாபமாக ஈட்டியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
வெள்ளை மாளிகையின் உயர்மட்ட இரகசியத் தகவல்களை முன்கூட்டியே அறிந்தவர்கள் அல்லது அரசாங்க ஊழியர்களே இத்தகைய ‘இன்சைடர் டிரேடிங்’ (Insider Trading) எனப்படும் உள்நோக்க வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க செனட்டர் கிறிஸ் மர்பி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தின் இரகசியத் தகவல்களைத் தனிப்பட்ட லாபத்திற்காகப் பயன்படுத்துவது தேசியப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமையும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆரம்பத்தில் இத்தகைய முறைகேடுகளை மறுத்து வந்த வெள்ளை மாளிகை, தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. கடந்த மார்ச் 24-ஆம் திகதி வெள்ளை மாளிகை நிர்வாக அலுவலகத்தினால் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட இரகசியச் சுற்றறிக்கையில், அரசாங்கத்தின் இரகசியக் கொள்கை முடிவுகளைப் பயன்படுத்தி நிதிச் சந்தைகளில் அல்லது முன்னறிவிப்புத் தளங்களில் வர்த்தகம் செய்வது கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இத்தகைய முறைகேடுகளைத் தடுக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலங்களைக் கொண்டு வரவும் தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.