மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அது தொடர்பில் இலங்கை அரசாங்கம் கையாளும் அணுகுமுறை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று நாடாளுமன்றத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அந்நாட்டு ஜனாதிபதியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தமது கண்டனத்தைப் பதிவு செய்தமை, நாட்டின் வெளியுறவுக் கொள்கையின் நடுநிலைமை குறித்துக் கேள்விகளை எழுப்புவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
“கடந்த காலங்களில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், வல்லரசு நாடுகளின் அநீதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்த ஒரு அரசியல் இயக்கம், இன்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் இத்தகைய பலவீனமான நிலைப்பாட்டை எடுப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பிய முஜிபுர் ரஹ்மான், ஈராக், சிரியா, லிபியா மற்றும் அண்மையில் கத்தார் மீதான தாக்குதல்களின் போது இலங்கைத் தலைவர்கள் கடைப்பிடித்த மௌனத்தையும் விமர்சித்தார். 165 குழந்தைகள் கொல்லப்பட்டபோதும், ஒரு நாட்டின் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டபோதும் காட்டப்பட்ட இந்த மௌனம், இலங்கை பாரம்பரியமாகக் கடைப்பிடித்து வந்த கொள்கை ரீதியான நடுநிலைமைக்கு முரணானது என்று அவர் குற்றம் சாட்டினார்.
நாங்கள் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காகவோ அல்லது வீணான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதற்காகவோ இதைக் கூறவில்லை என்றும், நாட்டின் கௌரவம் மற்றும் நீதிக்காகவே குரல் கொடுப்பதாகவும் அவர் விளக்கமளித்தார். ஈரானுடன் இணைந்து அமெரிக்காவையோ அல்லது இஸ்ரேலையோ தாக்கச் சொல்லவில்லை என்றாலும், அநீதிக்கு எதிராக எப்போதும் நீதியின் பக்கம் நின்ற இலங்கைத் தலைவர்களின் கொள்கையைத் தற்போதைய அரசாங்கம் தொடர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் ஏனைய வசதிகளை எந்தவொரு குறிப்பிட்ட தரப்பிற்கும் பயன்படுத்துவதற்கு இடமளிப்பது, எதிர்வரும் காலங்களில் நாட்டிற்குப் பெரும் பாதுகாப்புக் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார். வெளியுறவுக் கொள்கையில் அரசாங்கம் அதிக முதிர்ச்சியுடனும் கொள்கைப் பிடிப்புடனும் செயற்பட வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு எனத் தெரிவித்த அவர், இந்த விடயத்தில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

