முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்விகக் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
கொக்கிளாய் முகத்துவாரப் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கருக்கும் மேற்பட்ட பூர்விகத் தனியார் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கு பெரும்பான்மை இனத்தவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். இதற்கான ஆதாரமாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பெயர்ப்பட்டியல் தம்மிடம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பகுதிகளில் ஏற்கனவே சொந்தக் காணிகளும் வீடுகளும் உள்ளன. “ஒருவருக்கு ஒரு இடத்தில் மட்டுமே காணி” என்ற அரச கொள்கை இருக்கும்போது, அவர்களுக்கு இங்கு மீண்டும் காணி வழங்குவது எப்படி நியாயமாகும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அனர்த்தப் பாதிப்பைக் காரணம் காட்டி, கொக்கிளாய் முகத்துவாரத்தில் அத்துமீறி தங்கியுள்ளவர்களுக்குக் கொக்குத்தொடுவாய் பகுதியில் காணிகளை வழங்க எடுக்கப்படும் முயற்சிகளை அவர் கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்தார்.
1984ஆம் ஆண்டு இராணுவத்தினரால் தமிழ் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பின்னரே, அவர்களின் வாழிடங்களை ஆக்கிரமித்துப் பெரும்பான்மையினக் கடற்றொழிலாளர்கள் குடியேறியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
புலிபாய்ந்தகல்லில் சுற்றுலாத்துறைக்காக ஒதுக்கப்பட்ட காணிகளை ஆக்கிரமித்து, அங்கு அத்துமீறிக் கடற்றொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்கப் பெரும்பான்மை இனத்தவர்கள் முயல்வதையும் அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
“முன்னைய அரசாங்கங்களைப் போன்று மணலாற்றுப் பகுதியில் செய்த அடாவடித்தனங்களை இந்த அரசாங்கமும் தொடர வேண்டாம்” என ரவிகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.