எம்.பி. செல்வம் அடைக்கலநாதனுக்கு உயிர் அச்சுறுத்தல்: கனடா நபர் மீது புகார் – யூடியூபர் மீதும் மன்னார் நகரபிதா முறைப்பாடு!

images

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணக் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். அத்துடன், அவரை அவதூறு செய்யும் யூடியூபர் ஒருவர் மீதும் மன்னார் நகர சபைத் தவிசாளர் ஊடாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், யாழ்ப்பாணக் காவல் நிலையத்தில் தனது முறைப்பாட்டையளித்துள்ளார்.

கனடாவில் வசிக்கும் நபர் ஒருவர் தொலைபேசி ஊடாகத் தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு பகுதியில் நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினருக்குத் தொடர்பு இருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன.

உயிரிழந்த நபருக்கும், ஒரு பெண்ணுக்கும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தொடர்பு இருப்பதாகத் தனது யூடியூப் தளத்தில் கருத்துக்களைப் பதிவு செய்த யூடியூபர் ஒருவருக்கு எதிராகவும் காவல்துறை முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை மன்னார் நகர சபை நகரபிதா, மன்னார் காவல் நிலையத்தில் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version