ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் புதல்வர், அயதுல்லா செய்யித் மொஜ்தபா ஹொசைனி கமேனி (Mojtaba Khamenei), நாட்டின் புதிய உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஈரானின் ‘நிபுணர்கள் அவை’ (Assembly of Experts) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அவசரக் கூட்டத்தில், உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர், ஈரானின் உயரிய அதிகாரம் ஒரே குடும்பத்திற்குள் கைமாறும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களால் ஈரான் கடும் நெருக்கடியைச் சந்தித்து வரும் இக்கட்டான சூழலில் இந்த அதிகார மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) நேரடி செல்வாக்கு மற்றும் அழுத்தங்களின் பின்னணியிலேயே இந்த நியமனம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. புதிய தலைவருக்கு விசுவாசமாக இருக்குமாறும், நாட்டின் ஒற்றுமையைப் பேணுமாறும் ஈரானிய மக்கள், புத்திஜீவிகள் மற்றும் கல்வி சமூகத்தினருக்கு நிபுணர்கள் அவை விசேட அழைப்பு விடுத்துள்ளது.
1969 செப்டம்பர் 8 அன்று மஷ்ஹாத் நகரில் பிறந்த மொஜ்தபா கமேனி, இதுவரையான தனது அரசியல் பயணத்தில் பொது வெளிச்சத்திற்கு வராமல், திரைக்குப் பின்னால் இருந்து அதிகாரத்தைச் செலுத்திய ஒரு முக்கிய நபராகக் கருதப்படுகிறார். ஈரான்-ஈராக் போரில் பங்கேற்ற அனுபவம் கொண்ட இவர், 2000-களின் பிற்பகுதியில் ‘அதிகாரத்தின் பின்னணியில் இருக்கும் சக்தி’ என விக்கிலீக்ஸ் ஆவணங்களால் வர்ணிக்கப்பட்டார். இதுவரை எவ்வித அரசுப் பதவியையும் வகிக்காத அவர், தந்தை அலி கமேனியின் அரசியல் பாதையைத் தொடரவுள்ளார்.
புதிய உச்ச தலைவரின் நியமனமானது ஈரானின் உள்நாட்டு அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழக உயரடுக்கினர் புதிய தலைமைக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும் என நிபுணர்கள் அவை வலியுறுத்தியுள்ள நிலையில், சர்வதேச அளவில் ஈரான் இந்த புதிய தலைமையை எத்தகைய அணுகுமுறையுடன் கையாளப்போகிறது என்பதே உலக நாடுகளின் தற்போதைய முக்கிய விவாதமாக உள்ளது.

