துபாயிலிருந்து வந்த 45 தொன் உதவிப் பொருட்கள் எங்கே? – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

CID 1200px 22 11 14

‘தித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக துபாயில் இருந்து அனுப்பப்பட்ட மனிதாபிமான உதவிப் பொருட்கள் முறையாகப் போய்ச் சேரவில்லை எனக் கூறி, இது குறித்து விசாரணை நடத்துமாறு கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) நேற்று (10) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிவில் புலனாய்வு முன்னணியின் தலைவர் சஞ்சய மஹாவத்த இந்த முறைப்பாட்டைச் சமர்ப்பித்துள்ளார். இது தொடர்பாக அவர், துபாயில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து சமூக ஊடக ஆர்வலர் ஒருவரின் ஒருங்கிணைப்பில் சுமார் 45 தொன் உதவிப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திடம் (DMC) விசாரித்தபோது, அவர்களுக்கு மிகக் குறைந்த அளவிலான பொருட்களே கிடைத்துள்ளன.

இங்குக் கொண்டுவரப்பட்ட கொள்கலன்கள் (Containers) இலங்கை சுங்க வரித் திணைக்களத்தால் முறையாக ஆய்வு செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

திசைதிருப்பப்பட்டதா? கப்பலில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தை அடைவதற்கு முன்னதாக, வேறொரு தரப்பினரால் இடையில் மாற்றப்பட்டதா என்பது குறித்து விசாரணை அவசியம்.

பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்காகப் புலம்பெயர் இலங்கையர்கள் வழங்கிய இந்த நன்கொடைகள் முழுமையாக வந்து சேர்ந்ததா மற்றும் அவை யாருக்கு விநியோகிக்கப்பட்டன என்பது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என சிவில் புலனாய்வு முன்னணி வலியுறுத்தியுள்ளது.

 

 

Exit mobile version