நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், தற்போது மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவில்லை என்றாலும், வரும் காலங்களில் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படக்கூடும் என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். இன்று (17) நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
எதிர்காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் வினவியபோது, “இதுவரை நாம் ஒரு மணிநேரம் கூட மின்வெட்டு இன்றி மின் விநியோகத்தைக் கொண்டு செல்கிறோம். ஆனால், எரிபொருள் கையிருப்பு மற்றும் சர்வதேச விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொள்ளும்போது, மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய ஒரு காலம் வரவும் கூடும்” என அமைச்சர் விளக்கமளித்தார்.
எரிபொருள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் அலகுகளில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடே இந்த நிலைக்குக் காரணமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நீர்மின் உற்பத்தி மற்றும் ஏனைய மூலங்கள் மூலம் மின் விநியோகம் சீராகப் பேணப்பட்டு வந்தாலும், அனல் மின் நிலையங்களுக்கான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் திட்டமிடப்பட்ட மின் துண்டிப்பைத் தவிர்க்க முடியாது எனத் தெரிகிறது.
எவ்வாறாயினும், தற்போதைய நிலையில் மின்வெட்டு குறித்த இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், நிலைமையைத் தணிப்பதற்கான மாற்று வழிகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். மின்சார நுகர்வைச் சிக்கனமாக மேற்கொள்ளுமாறு இதன்போது பொதுமக்களிடம் மறைமுகமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

