பிசுபிசுத்துப்போன பௌத்த மாநாடு – சதி முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் லால் காந்த கிண்டல்!

01

கொழும்பில் அண்மையில் நடத்தப்பட்ட மகா சங்க மாநாடு மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றும், அவை முற்றாகப் “பிசுபிசுத்துப்போய்” விட்டதாகவும் விவசாய மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கே.டி. லால் காந்த கிண்டலாகத் தெரிவித்துள்ளார். கண்டி பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார். சில அரசியல் குழுக்கள் மதத்தின் பெயரால் மக்களைத் தூண்டிவிட்டு அரசாங்கத்தைக் கவிழ்க்கப் பார்த்ததாகவும், ஆனால் அந்தச் சதித் திட்டங்கள் எடுபடவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த பிப்ரவரி 20-ஆம் திகதி கொழும்பில் கூடிய சில பௌத்த தேரர்கள், அரசாங்கம் பௌத்த மதத்தை இழிவுபடுத்துவதாகக் கூறி ஒரு பிரகடனத்தை வெளியிட்டிருந்தனர். இதனைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், “ஆயிரக்கணக்கான தேரர்கள் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் வரவில்லை. மக்கள் இன்று தெளிவாக இருக்கிறார்கள். இனவாதத்தையோ அல்லது மதவாதத்தையோ கிளப்புவதன் மூலம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்பதை இந்தப் பிசுபிசுத்துப்போன மாநாடு நிரூபித்துள்ளது,” என விமர்சித்தார்.

மேலும், மதத் தலைவர்கள் நாட்டுக்கும் அரசாங்கத்திற்கும் அறிவுரைகளை வழங்கலாமே தவிர, வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் செயற்படக்கூடாது என லால் காந்த வலியுறுத்தினார். பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு எதிராகப் பரப்பப்படும் வதந்திகளை மக்கள் நிராகரித்துவிட்டனர் என்றும், மதத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக் கொள்பவர்கள் முதலில் தங்களின் ஒழுக்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்தார். அரசாங்கம் எவருக்கும் அஞ்சாது தனது மக்கள் பணிகளைத் தொடரும் என அவர் தனது உரையின் இறுதியில் குறிப்பிட்டார்.

 

 

Exit mobile version