மறைந்த பாப் இசை மேதை மைக்கேல் ஜாக்சன் மீது, ஃபிராங்க் காசியோ மற்றும் அவரது உடன்பிறப்புகள் முன்வைத்துள்ள பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் மற்றும் அதனைத் தொடர்ந்து எஸ்டேட் தரப்பு தொடரந்துள்ள சட்டப் போராட்டங்கள் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஜாக்சன் தங்களைச் சிறுவயதில் பாலியல் ரீதியாகப் பலாத்காரம் செய்ததாகக் கூறி, அவரது எஸ்டேட் மீது காசியோ குடும்பத்தினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதற்குப் பதிலடியாக, இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு வெளியே நடுவர் மன்ற (Arbitration) விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற ஜாக்சன் எஸ்டேட்டின் மனுவை லாஸ் ஏஞ்சல்ஸ் உயர் நீதிமன்ற நீதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்தத் தீர்ப்பின்படி, இரு தரப்பும் நீதிமன்றத்திற்குச் செல்லாமல் நடுவர் மன்றத்தின் மூலம் தங்கள் சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டில் ஃபிராங்க் காசியோ கையெழுத்திட்ட சட்டப்பூர்வ ஒப்பந்தத்தில் உள்ள பிணைக்கும் விதியின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மார்ச் 18-ஆம் தேதிக்குள் இது தொடர்பான முன்மொழியப்பட்ட உத்தரவுகளை எஸ்டேட் தரப்பு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
காசியோ குடும்பத்தினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், இது ஒரு திட்டமிட்ட பணப்பறிப்பு (Extortion) முயற்சி என்றும் மைக்கேல் ஜாக்சன் எஸ்டேட்டின் வழக்கறிஞர் மார்டி சிங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். “பல தசாப்தங்களாக மைக்கேல் ஜாக்சனைத் தங்களின் நெருங்கிய நண்பராகவும், நல்லவராகவும் பொதுவெளியில் புகழ்ந்து பேசி வந்த காசியோ குடும்பத்தினர், இப்போது பணம் கேட்டு மிரட்டுகின்றனர்” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுமார் 213 மில்லியன் டொலர் கோரி காசியோ குடும்பத்தினர் மிரட்டுவதாக எஸ்டேட் தரப்பு ஏற்கனவே சிவில் வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
மறுபுறம், ஜாக்சன் தங்களுக்குச் சிறுவயதில் போதைப்பொருள் கொடுத்து மூளைச்சலவை செய்து துஷ்பிரயோகம் செய்ததாக காசியோ குடும்பத்தினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. தாங்கள் மிரட்டி பணம் பறிப்பதாக எஸ்டேட் முன்வைக்கும் வாதங்களை காசியோ தரப்பு வழக்கறிஞர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இந்த சட்டப் போராட்டம், மைக்கேல் ஜாக்சனின் நற்பெயர் மற்றும் அவரது எஸ்டேட்டின் எதிர்காலம் சார்ந்து மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுவதால், வரும் நாட்களில் இந்த வழக்குகள் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

