மட்டக்களப்பு படுகொலை: கொலையாளிகளுக்கு கடும் தண்டனை கோரி பாரிய மக்கள் போராட்டம்!

Untitled 4

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய கொள்ளை மற்றும் கொடூரக் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்று (மார்ச் 27, 2026) மட்டக்களப்பில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் ஆரம்பமான இந்தப் போராட்டம், பின்னர் மாவட்ட செயலகம் வரை அமைதியான முறையில் பேரணியாகச் சென்றது. இதன்போது, மாவட்ட செயலகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைய முடியாதவாறு காவல்துறையினர் பேருந்துகளைக் குறுக்கே நிறுத்தியும், பிரதான வாயிலை மூடியும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

தடைகளைத் தாண்டி மாவட்ட செயலகத்திற்கு முன்பாகத் திரண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள், குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனையானது இனிவரும் காலங்களில் இவ்வாறான கொடூரங்கள் நிகழாத வகையில் மிகக் கடுமையானதாக அமைய வேண்டும் எனக் கோரினர். “மனிதாபிமானமற்ற இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு ஆதரவாக எந்தவொரு சட்டத்தரணியும் நீதிமன்றத்தில் முன்னிலையாகக் கூடாது” என்ற முக்கிய கோரிக்கை இதன்போது முன்வைக்கப்பட்டது. போராட்ட இடத்திற்கு வருகை தந்த மாவட்ட அரசாங்க அதிபர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி மற்றும் சட்டத்தரணிகள் சங்கங்களுக்கான மகஜர்கள் கையளிக்கப்பட்டன.

கடந்த 20 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காடு பகுதியில் பாழடைந்த கிணற்றிலிருந்து யுவதி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், திருட்டுச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் அதியுயர் விலை கொண்ட மருத்துவப் பொருட்கள் நேற்று நள்ளிரவு நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. குறிப்பாகச் சத்திரசிகிச்சைகளின் போது மயக்கமடையச் செய்யப் பயன்படுத்தப்படும் வீரியம் மிக்க மருந்துகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

தற்போது மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட யுவதிக்குத் தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண பாரிய குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், உயிரிழந்த பெண்ணின் உடலம் மீதான பிரேத பரிசோதனை விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது கடும் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

Exit mobile version