டித்வா (Ditwah) புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கொத்மலை, பனங்கம்மன பகுதி மற்றும் மகா பீல்ல கால்வாய் ஆகியவற்றைச் சீரமைக்கும் பாரிய சிரமதானப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
பனங்கம்மன பகுதியில் சுமார் 20 கிராமங்களை இணைக்கும் பிரதான வீதி நிலச்சரிவினால் முழுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த 2 மாதங்களாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போக்குவரத்து வசதிகளின்றி கடும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.
கொத்மலை மகா பீல்ல கால்வாய்ப் பகுதியும் புயல் தாக்கத்தினால் சேதமடைந்திருந்தது.
நேற்று (17) ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சீரமைப்புப் பணிகள் நாளை (19) வரை நடைபெறவுள்ளன. இந்தப் பணிகளுக்காக அனுராதபுரம் மற்றும் கினிகத்தேன ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் தன்னார்வ அடிப்படையில் கொத்மலைக்கு வருகை தந்துள்ளனர்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) நேரடி மேற்பார்வையின் கீழ், அனுராதபுரத்தைச் சேர்ந்த குழுவினர் வீதிச் சீரமைப்புப் பணிகளையும், கினிகத்தேன குழுவினர் கால்வாய் சுத்திகரிப்புப் பணிகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
புயல் பாதிப்பு ஏற்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், வெளியூர்களில் இருந்து வந்துள்ள இந்தத் தொண்டர்களின் பங்களிப்பு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பணிகள் நிறைவடைவதன் மூலம் 20 கிராமங்களுக்கான இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.